malaigal
ஆங்கிலம் : பி.எம்.ரஸ்தான் – தமிழில் : தி.இரா.மீனா
சாம்பல் வீடு
சாம்பல்,சாம்பலால் மட்டுமே
நாங்கள் வீடுகளைக் கட்டுகிறோம்
ஜன்னல்கள் புகையால் உருவாக்கம் பெறுகின்றன.
காற்று உட்புகுவதில்லை,புகை மட்டும் தங்குகிறது
நம் இதயங்களைச் சுண்டியபடி.
உள்ளே போகிறோம் வெளியே வருகிறோம்
அக்னிக் கதவுகளின் மூலமாக
இரவு முழுவதும்
புகையின் இதயத்தை ஈரப்படுத்துகிறோம்
இரவில் மழை பெய்கிறது.
* * *
2
மாடுகள் சாம்பல் கொட்டகையில் வசிப்பதில்லை
அவை கயிறுகளை இழுத்துக் கொண்டு வயலுக்கு ஓடுகின்றன.
மாடுகளின் பரிதாபமான அலறல்
நாற்றுகளை நடுங்கச் செய்கின்றன.
நாற்றுகளும் அலறுகின்றன.
சொந்தக்காரர் தொலைந்து போனார்
கேட்க முடியாமல், பார்க்க முடியாமல்..
இருண்ட காற்று கிரீச்சிடுகிறது.
அனாதை அலறுகிறது…
எங்கள் வீடுகள் எரிக்கப்பட்டன.
சாம்பல் இப்போதுதான் ஒரு குழந்தையைப் பிரசவித்திருக்கிறது
அவனுடல் கரிக்கோலால் ஆனது
கண்கள் எரிகோல்
பாலை உறிஞ்சுவதற்கு பதிலாக அவன் புகையை உறிஞ்சுகிறான்.
சாம்பலின் குவியலிலிருந்து அவனைத் தூக்குவதற்கு,
எங்கள் கைகள் மிகக் குட்டையானவை
ஆம்,நாங்களும் புகை மனிதர்கள்தான் என்று
குறுகிய மூச்சு சொல்கிறது.