நிகனோர் பரா

பிரிந்தன் கணேசலிங்கம்

ஆறு மணிநேர புகையிரத பயணத்தை நிரப்பியது லத்தின் அமெரிக்க கவிதைகள் தான். தொடர்ந்து நீண்ட நேரம் வாசிக்க முடியவில்லை என்றாலும் விட்டு விட்டு பத்து கவிதைகள் வாசித்தேன். ஒவ்வொரு கவிதைக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி தேவைப்பட்டது. ஒவ்வொரு இடைவெளியிலும் மனம் வெவ்வேறு திசைகளில் பயணித்தது. கவிதைகள் தருகின்ற அமானுஷ்ய உணர்வு இடைவெளிகளில் பரவும் போது முற்றிலும் வேறு ஒரு சூழல் உருவாகி விடுகிறது. புகையிரதம் எத்தனை வீரியமாக சத்தம் எழுப்பிக்கொண்டு விரைந்த்தாலும், மெல்லிய மேகத்தின் மேல் மிதப்பது போல இருக்கும். ஜன்னலினூடாக தென்றல் முகத்தின் தசைகளை வருடினாலும், பாலைவனம் போன்ற வெம்மை இருக்கும். எதிரிலே இருக்கின்ற அத்தனை மனிதர்களும் அழகாக தோன்றுவார்கள் அல்லது அலங்கோலமாக தோன்றுவார்கள் அல்லது மறைந்து போவார்கள். கவிதைகள் மேற்ப்பரிப்பினூடு மகிழ்சியையும் ஆழ்ந்து போகும் போது இறுக்கத்தையும் தரலாம். ஆறு மணிநேரமும் எத்தனையோ சூலுக்கும் உலகங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் இசைந்து கொடுத்து வந்திறங்கினேன்.

 

சிலி நாட்டு கவிஞர்களான நிகனோர் பராவையும்(Nicanor Parra) என்றிக் லிஹ்னையும்(Enrique Lihn) முதன் முதலில் வாசித்தேன். இருவரும் ஒரே நாட்டில் ஒரே காலத்தில் வாழ்ந்த கவிஞர்கள். நிகனோர் பரா தனது நூற்றி மூன்றாவது வயதில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். 1914இல் பிறந்தவர். என்றிக் லிஹ்ன் 1929- 1988 காலப்பகுதியில் வாழ்ந்தவர். நிகனோர் பரா இன்றும் தனது கவிதைகளை எழுதி பிரசுரித்து வருகின்றார்.

 

The Pilgrim – Nicanor Parra

 

எங்களது சாதாரண தர ஆங்கில இலக்கிய தொகுப்பில் Monkeys என்ற ஒரு சிறுகதை இருந்தது-  பெயர் சரியாக ஞாபகம் இல்லை. ஒரு சிறிய வயதுடைய சமனேரா என்னும் பையன், பௌத்த பிக்கு ஆவதற்காக பௌத்த மடம் ஒன்றில் சேர்க்கப்படுகிறான். அவனின் ஆசைகள் பற்றிய வரைவாக அந்த சிறுகதை நகர்ந்து செல்லும். அதில் சமனேரா அதிக நேரத்தை குன்றுகளில் குரங்குகளோடு களிப்பான். அது அவனிற்கு உவகை ஊட்டுவதாக அமையும். இதே போன்ற ஒரு பௌதீக சூழலை இந்த கவிதை நினைவூட்டியது.

மிகவும் சிறிய வயதில் துறவுநிலைக்கு கட்டாயமாக தள்ளப்பட்ட சிறுவன், – உலக சந்தோசங்கள் அனைத்தும் அனுபவிக்கின்ற சாதாரண மனிதர்களை நோக்கி இறைஞ்சுவதாக பரா எழுதுகின்றார். சிறுவனை அடையாளப்படுத்த பரா பயன்படுத்துகின்ற யுத்தி ஆழமானது. அதே நேரத்தில் எனக்கு கவலையை அளித்ததும் கூட.

But, I am a child calling to its mother from behind rocks,

I am a pilgrim who makes stones jump as high as his nose

சாதாரண குன்றின் பின்னால் நின்றுகொண்டு, குன்றை மீறி எட்டிப் பார்த்து தனது அம்மாவை அழைக்க பாய்கின்றபோது மூக்கு உயரம் மட்டுமே மேலேளும்பக்கூடிய சிறுவனாக சித்தரிக்கப்படுகின்றான். நான் வசித்துவந்த நகரத்தின் வீட்டிற்கு எதிரே பௌத்த விகாரை ஒன்றிருக்கிறது. அங்கே பௌத்ததுறவிகள் ஆவதற்காக சிறுவர்கள் வந்திருப்பார்கள். மிகவும் சிறியவயதில் முழுமையாக முடிகளை அகற்றி காவித்துணியும் உடுத்தி உலகின் எல்லா சுகங்களையும் துறந்தவர்கள் போல விகாரைக்கும் அவர்கள் இருக்கின்ற வீட்டிற்கும்(அருகில்) ஓடித்திரிவார்கள். பின்னேரங்களில் தங்களை மறந்து இயங்குவதையும் விகாரைக்கு வருகின்ற சிறுவர்களையும் சிறுமிகளையும் பார்த்து விளையாட அழைப்பதையும் கண்டிருக்கின்றேன். இவையெல்லாம் சமயத்தின் படி தவறுகள் என்றாலும் மனிதத்தின் படி?

நிகனோர் பரா இதையே வினவுகின்றார். எல்லா மனிதர்களைப்போலவும் தானே நாங்களும் – கனவுகளையும் ஆசைகளையும் வெறுத்து ஒதுக்கிவிட முடியாத போதும் கட்டாயப்படுத்தி அடைத்துவைக்கின்ற நிலைமையை கேள்வி கேட்கின்றார். புத்தர்கூட உலக சந்தோசங்களை அனுபவித்துத் தான் துறவறம் பூண்டார். தங்கள் சொந்த தேவைகளுக்காக பிள்ளைகளின் சந்தோசங்களை அழிக்கின்ற தானம் பற்றி கேட்கின்றார்.

 

A tree crying out to be covered with leaves.

 

எல்லாவற்றையும் மரத்துக்கு தருகின்ற இலைகளை போல அனைத்தையும் வேண்டி நிற்கின்ற சிறுவர்களின் மனநிலையை நிகனோர் பரா எழுதுகின்றார்.

 

இந்தக்கவிதையை ஸ்பானிஷ் மொழியிலிருந்து W.S.Merwin ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்திருகின்றார்.

 

இந்தக்கவிதையை வாசித்து முடித்தபின்னர் பேரமைதி சூழ்ந்துகொள்கிறது.

பின்னூட்டமொன்றை இடுக