ஸீரோ டிகிரியும் மறாவும்

https://brinthansite.wordpress.com

Brinthan Online

சாரு நிவேதிதாவின் ஸீரோ டிகிரியில் ஆறாவது அத்தியாயத்தியாயத்தில் இரண்டு கதைகளை ஒன்று விட்டு ஒன்றாக வசனங்களை மாற்றி மாற்றி எழுதியிருப்பார். ஸீரோ டிகிரி வாசித்து மாதக்கணக்கு ஆனாலும் மீண்டும் இதை நினைவுபடுத்த வேண்டிய தேவையை உணர்கிறேன். ஒரு நடிகையைப்பற்றியும் தீவிரவாதி ஒருத்தர் தனது சகாவால் கொள்ளப்பட்டது பற்றியும் – குறுகிய அத்தியாயம் எழுதப்பட்டிருக்கும்.நாவல் முழுவதும் பின்நவீனத்துவத்தின் கூறுகள் பரந்து காணப்படும். சிதறிய போக்கு, மையமின்மை, முடிவின்மை என்று வேறு வேறு பல உத்திகளை கையாண்டிருப்பர் சாரு நிவேதிதா. ஆறாவது அத்தியாயம் முதலாம் வாசிப்பில் சிக்கலானது. இரண்டு வேறு வேறு நிகழ்வுகள் ஒன்றோடு ஒன்று கலந்து குழப்பி எழுதப்பட்டிருக்கும். வாசகர் இதனை சிறிது வாசித்துக்கொண்டுபோகக் கண்டுபிடித்துவிடுவார். அத்தியாயம் இடையிலே இரண்டு நிகழ்வுகளும் கலக்கும் புள்ளி தென்பட, அத்தியாயம் இவ்விரு நிகழ்வுகளுக்குமான சம்பந்தப்படுத்தலை உறுதி செய்து நிறைவுறும்.

இந்த சந்தர்ப்பத்தில் அத்தியாயம் ஆறை மட்டும் நினைவுபடுத்தவேண்டிய தேவை – எனது நண்பர்களால் சமீபத்தில் வெளியிடப்பட்ட மறா குறும்படத்தினால் ஏற்பட்டது. முன்னைய குறிப்பு ஒன்றில் அதன் கருவின் முக்கியத்துவம் மற்றும் கருவின் வெளிப்பாடு பற்றி எழுதியிருந்தேன். அப்போது குறும்படம் தொடர்பான வாதங்கள் ஏற்பட வேண்டும் என்றும், அது பற்றிய உரையாடல் நிகழ்த்தப்பட வேண்டும் என்று அழுத்தமாக கூறினேன். அதன் பின்னரும் இன்று வரை உரையாடல்கள் பொது வெளியில் நிகழ்த்தப்படவில்லை. ஈழத்து சினிமா என்பதை இப்பொழுது அதிகமாக பேசிக்கொண்டிருக்கும் நாம், இவ்வாறான முயற்சிகளைப் பற்றிய உரையாடல்களை நிகழ்த்துவது ஆரோக்கியமானதாக இருக்கும். இன்று முகப்புத்தகங்களில் சினிமா பற்றி காரசாரமாக விமர்சனம் செய்பவர்களின் எண்ணிக்கை இமாலயமாக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. சரி பிழை என்பதற்கு அப்பால் கருத்துக்களை வெளிப்படையாகப் பேசுகின்ற தன்மை ஆரோக்கியமானது. ஆனால் இப்படியானவர்கள் பார்வை சுதேச புது முயற்சியாளர்களுக்கு கிடைக்கவில்லை என்பதே எனது ஆதங்கம்.

 

மறாவின் முடிவில் Impulse என்று எனக்கும் பங்கொன்றினை அளித்திருந்தார்கள். Impulse என்பதை உந்துவிசை என்ற அர்த்தத்தில் பாவித்திருந்தார்கள். எனது முதலாவது குறுங்கதையின் அடியில் இந்த சொல்லை பாவித்திருந்தேன், அதுவும் இதே சக நண்பர்களால் தொடங்கப்பட்ட பொய்யர் என்ற முகப்புத்தக பக்கத்திற்கு எழுதப்பட்டது. அதிலிருந்து அந்த வார்த்தையை எடுத்து என்னோடு சேர்த்திருக்கலாம்.

ஸீரோ டிகிரியின் ஆறாம் அத்தியாயமும் மறாவும் – ஓரளவு ஒரே வகையான கதை நகர்த்தல் உத்தியை கையாளுகின்றன. ஒன்றோடு ஒன்று சம்பந்தமுள்ள நிகழ்வுகளை ஒழுங்கின்றி காட்சிப்படுத்தலின்மூலம் இரண்டுமே கதையை நகர்த்துகின்றன. இதை non linear வகை கதை நகர்த்தல் என்கிறார்கள். நாவல் ஒன்றின் ஒரு பகுதியை எழுத்துருக்களின் மூலம் non linear ஆக வடிவமைப்பு செய்து – வெளிப்படுத்துவது பெரியளவு வாசக மனநிலையை சமநிலையிழக்கச் செய்யாது. நாவல் ஒன்றில் முழு கதை சொல்லலுக்குள் ஒரு குறுகிய பகுதியாக வருகின்ற அத்தியாயம் ஏற்படுத்துகின்ற பாதிப்பு குறைவு. இருந்தும் சாரு நிவேதிதா இதனை லாவகமாகக் கையாண்டிருப்பர். மறாவில் நிலைமை வேறு. குறும்படம் ஒன்று non linear முறை கதைசொல்லலூடாக அதன் கருவினை வெளிப்படுத்தப்படப்போகின்றது என்பது மிகவும் சிக்கலான விடயம். வலிமையான கரு ஒன்றினைக்கூட – அதுவும் சாதாரண கதை சொல்லலின் மூலம் சரியாக வெளிப்படுத்தமுடியாத நிலைமைகள் இருக்கின்ற சூழலில், வலிமையற்ற கருவினை non linear முறை கதை சொல்லலுக்குள் உள்வாங்கி இன்னமும் வெளிப்பாடற்ற தன்மையை மறாவின் மூலம் உருவாக்கியிருக்கிறார்கள். இதை நான் திரைக்கதையின் பிறழ்வு என்பேன்.

சாரு நிவேதிதா

பின்னூட்டமொன்றை இடுக