பித்தத்தை எகிறச் செய்யும் பாலை

Image may contain: மௌனன் யாத்ரீகா, close-up
மௌனன் யாத்ரீகா

பூமியின் பேருயிரான புற்களை 
வேர்த்திரளோடு எரித்துவிட்டது முதுவேனிலின் வெய்யில்

நிறைசூல் முயலின்
கனிந்த மடியிலிருந்து
குட்டிகள் இறங்கிக் கொண்டிருக்கும்
ஈச்சம்புதரில் முற்றிய காய்களைப் பறித்துக் கொண்டுபோய்
கஞ்சி பொங்கும் பாலைச் சிறுக்கியே

எக்காலத்திலும் இல்லாத அளவுக்கு
எலும்புகள் காய்ந்து கிடக்கும்
கொடிய பாதையில்
கொம்பு மட்டும் இளைக்காத
அடிமாடுகளை ஓட்டிச் சென்றிருக்கிறான் நம் தலைவன்

உப்புக்கண்டம் தீர்ந்த பானையில்
ஒட்டியிருக்கும் கறி நாற்றத்தை
நுகர்ந்து நுகர்ந்து மருகுகிறேனடி
அது ஏன் அவனது வியர்வை நெடியைப்போல்
என் பித்தத்தை எகிறச் செய்கிறது?

 

இது நரிக்கதைதான்
_______________ மௌனன் யாத்ரிகா

சல்லிப்பயல் அவன்
இனத்துக்குப் பிடித்த தரித்திரம் என்பார்கள்
அண்டப் புலுகன் அவனென்பாரும் உளர்
ஒண்ட வந்தப் பிடாரியென்பது பொருந்தும்
அவனடித்த உடுக்கைக்குப் பயந்து
உதவாக்கரை அரசன் ஒருவன்
தாயத்துக் கட்டிக் கொண்டான்
மந்திரித்த தகட்டினை மந்திரிகள் மாட்டிக் கொண்டனர்
உலகத்தர கில்லாடியவன்
கட்டைகள் உருட்டுவதில் பேர் போனவன்
இவனுக்கு முன் எலிக்குஞ்சு
யோக்கியன் என்று சுயபெருமை பேசுவான்
ஆனால், கடைந்தெடுத்த ஈனன்
தான் வைத்திருக்கும் சுட்டப்பழத்தில்
அழுகிப் போன கொட்டைகள் இருப்பது தெரியாமல்
முளைக்கப் போடுவான்
அந்தோ பரிதாபம்…

 

காமத்தைத் தணிக்கும் வெள்ளாட்டின் ஈரல்
_____________ மௌனன் யாத்ரிகா

வாகை வெடித்த காட்டுப் பாறையில்
நிணம் வழியக் காயும் 
இவ்வெள்ளாட்டுக் கறிக்கு
மறத்தியின் நிறம்

கணு வளையத்தில் கூர்மையேறிய மரத்தில் அமர்ந்திருக்கும் கழுகே!
உதிர்ந்த மூங்கில் இலைகளை
புழுதியோடு சேர்த்துத் தூக்கும் வெங்காற்றே!
கிடைக்காரனின் முரட்டு நாயிடமிருந்து
உருமாக்குறி தப்பித்தது குறித்து
போய் அவளிடம் சொல்லுங்கள்

உடல் வேக உடும்போடும்
பாலைப் பெருவெளியில்
கானலடிக்கும் கத்தாழைச் செத்த வழியில்
ஆறலைத்தல் நிமித்தம் பிரிந்த விடலைக் கள்வன்
திரிந்த நிலத்திலும் நீங்கா தாவரம்போல்
செழித்த காதலால் திரும்புகிறேன்

பானையில் மிச்சமிருக்கும்
உப்புக்கண்டத்தை
மஞ்சள் சேர்த்து ஊற வைக்கச் சொல்லுங்கள் மறத்தியை
கச்சைக் கலைந்து முலைகள் அவிக்கும் முதுவேனில் பருவத்தின் காமத்தை
வெள்ளாட்டின் ஈரலைச் சுட்டு
தணிப்பேனென்றும் சொல்லுங்கள்!

12:02 நடு இரவு.
08/03/2019

பின்னூட்டமொன்றை இடுக