எஸ் ராமக்கிருஷ்ணனின் நேர்காணல்

எஸ்.ராமகிருஷ்ணன் வாசகர்கள்

புதுவகை எழுத்துகள் ஒரு போக்காக தமிழில் அறிமுகமான காலகட்டத்தில் அந்த வகை எழுத்துக்களை முன்வைத்தவர்களில் நீங்களும் ஒருவர். அப்போது யதார்த்தவாதம் முடிந்துவிட்டது கதை அம்சம் தேவையில்லை என்பது போன்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன ஆனால் அப்போதும் புதுமுயற்சிகளை செய்தவர்களில் நீங்கள் மட்டும் கதையம்சம் கொண்ட கதைகளை எழுதி வந்தீர்கள். இது சார்ந்து குறிப்பாக அப்போது நடைபெற்ற விவாதங்களை நீங்கள் எப்படி எதிர்கொண்டீர்கள். ?

யதார்த்தவாதம் என்ற பெயரில் சுயஅனுபவத்தை எழுதுவது மட்டுமே கதை என்று கூக்குரலிட்டுக் கொண்டு ஒருசாராரும் , மறுபக்கம் லட்சியவாத கோட்பாடுகளுக்கு ஏற்றபடி கதையை தைத்துக் கொடுக்கும் சீர்திருத்த கதாசிரியர்களுக்கும் இடையில் கதைகள் என்பது ஒரு புனைவு என்று சொன்னவர்களில் நானும் ஒருவன். இது ஒன்றும் எனது கண்டுபிடிப்பல்ல. கதைகள் புனைவு என்பது யாவரும் அறிந்த உண்மை தான். ஆனால் புனைவு என்பதை பொய் என்று புரிந்து வைத்திருப்பதை நான் மறுத்தேன். கற்பனை என்பது உண்மைக்கு எதிரானதல்ல. உண்மையை புரிந்து கொள்வதற்கும் வெளிப்படுத்துவதற்குமான சாத்தியபாடு என்று கூறினேன்.
யதார்த்தம் என்பதும் ஒரு புனைவே. அதை முன் முடிவுசெய்யப்பட்ட புனைவாக சொல்லலாம். கடந்த காலங்களில் யதார்த்தத்தை தட்டையான ஒற்றைப் பரிமாணமுள்ளதாக மட்டுமே புரிந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் யதார்த்தம் பலதளங்களை உடையது. அதீதமும் இயல்பும் ஒன்றாக முயங்கிகிடக்கக் கூடியது. காலத்திற்கு காலம் யதார்த்தத்தை பற்றிய புரிதல் தொடர்ந்து மாறிக் கொண்டேதானிருக்கிறது , யதார்த்தம் என்ற பெயரில் நடைபெற்று வந்த சலிப்பூட்டும் ஒற்றைதன்மை கதைமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று தான் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். நம் கதை மரபு ஒற்றைதன்மை வாய்ந்தது அல்ல. அது பன்முகத்தன்மை வாய்ந்தது,
கர்ப்பிணி ஒருத்தி நடந்துவரும் போது அவள் வயிற்றில் உள்ள குழந்தை தன் இருப்பிடத்தில் இருந்து நகரவேயில்லை ஆனால் குழந்தையும் பலமைல் துரம் கடந்து தானே செல்கிறது. இது யதார்த்தமா , இல்லையா?

புதிய கதை எழுத்து இன்று தேக்கநிலை அடைந்துவிட்டிருக்கிறது. மீண்டும் யதார்த்தவாத கதைகள் வரத்துவங்கியுள்ளதே , இந்த மாற்றத்தை எப்படி பார்க்கிறீர்கள் ?

புதிய கதை எழுத்து என்று எதைச் சொல்கிறீர்கள் என தெரியவில்லை. நான் புதிய கதை எழுத்து பாரதி புதுமைபித்தனில் துவங்கி மௌனி , நகுலன், முத்துசாமி, ஜி.நாகராஜன், சம்பத், கோபிகிருஷ்ணன் , ஜெயமோகன், கோணங்கி, , உமா வரதராஜன், முத்துலிங்கம். என நீண்டு தொடர்ந்து வந்து கொண்டேயிருப்பதாகவே நினைக்கிறேன்.
எது யதார்த்தம் என ஏதாவது வரையறையிருக்கிறதா என்ன? பயன்பாட்டிற்கு உட்படுகின்றவற்றை மட்டுமே நாம் யதார்த்தமாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். நம் புலன்கள் தான் யதார்த்தத்தின் வரையறையாகயிருந்திருக்கிறது. ஆனால் புலன்கள் முழுமையானவையல்ல. அவை குறைபாடானவை என்பதை ஒவ்வொரு மனிதனும் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்து தானே இருக்கிறான். நம் கால இடப்பிரக்ஞை கூட புனைவு தானே. அதை நாம் அன்றாடம் புழங்கவில்லையா ? புனைவை தான் நமது பெயராக சூடியிருக்கிறோம் .நம் உடல்கள் புனைவால் தானே நிரம்பியிருக்கிறது.
புனைவை புரிந்து கொள்வதற்கும் அதனுடாக உள்ள புனைவடுக்குகளை கண்டறிவதற்கும் , உருவாக்குவதற்குமே புதியகதை எழுத்து முயற்சிக்கிறது. அது தமிழில் தொடர்ந்து எழுதப்பட்டு கொண்டு தான் வருகிறது.
கடந்த கால எழுத்தாளர்கள் யதார்த்தத்தை புரிந்து கொள்ளவேயில்லை தங்கள் எழுத்து உண்மையை கண்ணாடி போல பிரதிபலிக்கின்றது என்று அறிவித்துக் கொண்டார்கள்.. ஆனால் கண்ணாடி உருவத்தை இடவலமாக மாற்றி தான் பிரதிபலிக்கும் என்ற நிஜத்தை கூட புரிந்து கொள்ளாமல் இருந்தது தான் வேடிக்கையாக இருக்கிறது

இதுவரை யதார்த்தவாதமாக நம்பபட்டு வந்தவைகள் தவறானவைகளா ?

சொல்லும் மரபிலிருந்து எழுத்து மரபிற்கு கதைகள் மாற்றம் கொண்ட போது கூட கதை மரபுகள் கைவிடப்படவில்லை. தமிழ்சிறுகதையின் ஆரம்ப கால முயற்சிகளில் வெளிப்படையாக இதை காணமுடிகிறது. குறிப்பாக உதிரி மனிதர்களுக்கும் , அபௌதீக தளங்களுக்கும், மறுகதைகளுக்கும் , இடமிருந்திருக்கிறது.
பாரதி, புதுமைபித்தன் கதைகளில் கதைசொல்லல் தனித்துவமாக தானே இருந்தன. ஆனால் அதன் அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் கதையின் மையமாக குடும்பத்தை சுருக்கியதும் அதன் தினப்பாடுகளை பதிவு செய்வது மட்டுமே கதைகளின் வேலை என்று முடிவு செய்து கொண்டு ரேடியோ நாடகங்களை போல வாய்ஒயாமல் பேசும் கதாபாத்திரங்களை எழுதி நிரப்பியது தவறான வழிகாட்டுதலாக படுகிறது. அதன் தொடர்ச்சி அடுத்த பதினைந்து வருடங்களில் சிறுகதைகள் மத்தியதர வர்க்கத்து மனிதர்களின் புலம்பலுக்கும் நிராசைகளுக்கும் உரிய வடிவமாக சுருங்கிப் போய் விட்டது.
கார்க்கி, செகாவ், தஸ்தயெவ்ஸ்கி, டால்ஸ்டாய் போன்றவர்களின் ருஷ்யசிறுதைகளும் மாப்பசான். பால்சாக் போன்ற பிரெஞ்ச் இலக்கியவாதிகளும் எட்கர்ஆலன் போ , ஜாக் லண்டன் , ஸ்டீபன் கிரேன் போன்ற அமெரிக்க சிறுகதையாசிரியர்களும் தமிழில் அறிமுகப்படுத்தபட்ட போதும் அந்த எழுத்துகளிடமிருந்து தமிழ் எழுத்தாளர்கள் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பது ஆச்சரியமாக தானிருக்கின்றது.
அதே வேளையில் வளமையான சங்ககவிதைகளும் சமணபௌத்த காப்பியங்களும், நுறுவகை கதை சொல்லல் முறைகொண்ட நாட்டார் கதைகளும், தொன்மங்களும் நம்பிக்கைகளும். கூட தமிழ் சிறுகதையாசிரியர்களை பாதிக்கவேயில்லை. பின் எதிலிருந்து தான் இவர்கள் உருவானார்கள். ? எதை தங்களது பார்வையின் அடித்தளமாக கொண்டிருந்தார்கள்.? எதை யதார்த்தம் என்று சொல்கிறார்கள் என புரியவில்லை.

உங்களது இரண்டாவது நாவலான நெடுங்குருதியை ஒட்டி உங்களது எழுத்துகளில் ஒரு மாற்றம் தெரியத்துவங்குகிறது. அக்காலகட்டத்தில் எழுதப்பட்ட கதைகளில் கூட இந்த மாற்றத்தை உணர முடிகிறது. குறிப்பாக நெடுங்குருதி ஒரு மேஜிக்கை தன்னுள் வைத்திருக்கும் அதே நேரத்தில் அது ஒரு யதார்த்த வாத நாவலாகவும் இருக்கிறது. உங்கள் எழுத்தில் நிகழ்ந்த இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன ?

நெடுங்குருதி நாவலின் துவக்கம் பத்தாண்டுகளுக்கு முன் நான் எழுதிய காட்டின் உருவம் சிறுகதையிலே துவங்குகிறது. நெடுங்குருதி நாவல் வேம்பலை என்ற புனைவான கிராமத்தில் வாழும் வேம்பர்கள் என்ற மனிதர்களையும் அவர்களது மூர்க்கமான வாழ்க்கை போராட்டத்தையும் , துக்கத்தையும் வேதனைகளையும் அவர்களது விசித்திர கனவுகளையும் சொல்கிறது.
உப பாண்டவம் போன்று இதிகாசத்தின் மீதான மீள்புனைவாக ஒரு நாவலை எழுதிய பிறகு இருபதாண்டுகளுக்கும் மேலாக என்னுள் புதையுண்டிருந்த வேம்பலையை எப்படி பதிவு செய்வது என்று யோசனையாக இருந்தது.
பால்ய நாட்களில் மாட்டுதரகர்களோடு சந்தைக்கு செல்லும் போது அவர்கள் தாங்கள் அறிந்த கதையை வழியெல்லாம் சொல்லிக் கொண்டு வருவார்கள். அதில் எது நிஜம் எது பொய் என்று பிரிக்கமுடியாது. கதாபாத்திரம் போன்று வர்ணிக்கப்பட்ட மனிதனை சந்தையில் நேரிலே நாம் காண சந்தர்ப்பம் அமையும். அதே நேரம் அவர்கள் தங்களது நிலவியலையும் அதனை பீடித்திருக்கும் துர்கனவையும் தொடர்ந்து எல்லாகதைகளிலும் சொல்லிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.
அந்த கதை சொல்லல் முறையை தான் நெடுங்குருதியிலும் காணமுடியும். குறிப்பாக இயற்கையையின் கரங்கள் வாழ்வை எப்படி புரட்டிப் போடுகின்றன என்பதையும் அதன் குரூரமும் கருணையும் எப்படி பீறீடுகின்றன என்பதையுமே இந்நாவல் மையமாக கொண்டிருக்கிறது.
என்னைப் பொருத்தமட்டில் இந்த நாவல் ஒரு வெயிலின் கதை . நிலப்பரப்பெங்கும் வெயில் ஒரு மூர்க்கமான மிருகத்தை போல தன்விருப்பப்படி சுற்றியலைகிறது. வெயிலை குடித்துக்கிறங்கிய மனிதர்கள் தீமையின் உருக்களை போல நடமாடுகிறார்கள். வாழ்வை பற்றிய உயர்வெண்ணங்கள் எதுவும் அவர்களிடமில்லை. சாவை குறித்த புலம்புதல்களுமில்லை. அந்த நிலவியலில் வாழ்வது என்பதே ஒரு மாயம் தான்.
தாவரங்களின் உரையாடலில் இருந்து எனது கதைவெளி மாறிக் கொண்டுவரத்துவங்கியது. அதன் தொடர்ச்சியாக வெயிலைக் கொண்டுவாருங்கள் தொகுப்பின் அதிகதைகளையும் உப பாண்டவம் நாவலையும் சொல்லலாம். அதன் பின்னணியில் தான் நெடுங்குருதி வந்திருக்கிறது. ஆகவே எழுத்து முறை இப்போது தான் மாற்றமடைந்துள்ளது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.
தமிழில் யதார்த்தவாத கதைகளே முழுமையாக எழுதி முடிக்கபடவில்லை இந்நிலையில் புதுவகை எழுத்துக்களுக்கு அவசியம் இல்லை மேலை இலக்கியங்களை படித்துவிட்டு அடிக்கபடும் காபி என்கிற வகையில் விமர்சனங்கள் தற்போது முன்வைக்கபடுகின்ற இதற்கான உங்களது எதிர்வினை ?
ஒரு நேரத்தில் ஒரேயொரு பொருளை மட்டுமே யாவரும் வாங்க வேண்டும் என்று கட்டயாப்படுத்துவதற்கு தமிழ் இலக்கியம் என்ன ரேஷன் கடையா ? மேலை இலக்கியங்களை படித்து விட்டு காபியடிக்கிறார்கள் என்று சொல்பவர் யார்.? அவர்கள் என்ன வாசித்திருக்கிறார்கள். ? வம்பு பேச்சுகளும் அவதுறுகளும் தொடாத துறையிருக்கிறதா என்ன. ? இல்லை என்றால் யதார்த்தவாத கதைகள் இவ்வளவு நாட்களுக்குள் எழுதி முடிக்கபட்டுவிடும் என்று ஏதாவது ரிடயர்ட்மண்ட் தேதி ஏதாவது இருக்கிறதா என்ன ? தங்களுக்கு புரியாத எதுவாகயிருந்தாலும் அது வெளிநாட்டு இலக்கியத்தின் காப்பி என்று கூச்சப்படாமல் சொல்வதற்கு ஒரு கூட்டமே தயாராகயிருக்கிறது.

இன்றுள்ள தமிழ் இலக்கிய போக்குகள் எப்படியிருப்பதாக நினைக்கிறீர்கள்?

பன்முகப்பட்டதாகவும் பல்வேறு சீரிய தளங்களில் செயல்படுவதாகவும் புதிய எழுத்துவகை உருவாகியிருக்கிறது. குறிப்பாக தமிழ்கவிதையில் பெண்கவிஞர்களின் வரவு இதுவரையில்லாத சாத்தியங்களை உருவாக்கியிருக்கிறது. அவர்கள் ஆபாசமாக எழுதுகிறார் என்று கூச்சலிடுவது அர்த்தமற்றது. ஆபாசம் வீட்டு தொலைகாட்சியில் , பாடல்களில், பேச்சில் , நடவடிக்கைளில் வீடுகளிலும் ஊடகங்களிலும் பெருகிவழிவதை ரசித்துக் கொண்டிருப்பவர்கள் பால்உணர்வுகளை ஒடுக்கபட்ட உடலின் குரலாக கவிதைகளில் வெளிப்படுத்துவதை எதிர்ப்பது ஒரு திட்டமிட்ட வன்முறை என்பேன்
சிறுகதையிலும் உதிரிமனிதர்கள் பற்றியும் மனத்திரிபுகள், பால் இச்சைகள் குறித்து பேசும் கதைகள் சிறப்பாக எழுதப்பட்டுவருகின்றன. புத்தகவெளியிட்டில் ஒரு உலகத்தரம் தமிழுக்கு சாத்தியமாகியிருக்கிறது. ஆனால் நாவல்கள் மிக குறைவாகவே எழுதப்படுகின்றன.

இப்போது உலக அளவில் யாருடைய எழுத்துகளை முக்கியமானதாக கருதுகிறீர்கள் ?

போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான ஜோஸ் சரமாகோவின் நாவல்கள் மிகவும் சிறப்பானதாகயிருக்கின்றன. குறிப்பாக அவரது The stone Raft, The Gospel According to jesus chirst இரண்டையும் கடந்த பத்தாண்டுகளில் நான் வாசித்த மிகச்சிறந்த நாவல்களெனச் சொல்வேன். இன்னொருவர் Orhan Pamuk என்ற துருக்கியை சேர்ந்தவர் இவரது நாவலான My name is Red மார்க்வெஸின் நுற்றாண்டுகால தனிமைக்கு நிகரானது. 26 மொழிகளில் மொழிபெயர்க்கபட்டிருக்கும் பின்நவீனத்துவ நாவலது.
ஹருகி முராகமியின் சிறுகதைகளும் வில்லா ஸிம்போர்ஸ்காவின் கவிதைகளும் வாசிப்பில் புதிய அனுபவம் தருகின்றன.

உயிர்மை இதழில் உலக எழுத்தாளர்கள் பற்றி, அவர்களது எழுத்துக்கு அப்பாற்பட்ட ஆர்வங்களை பற்றி எழுதி வருகிறீர்கள். இதை எழுதவேண்டும் என்று என்ற எண்ணம் எப்படி உருவானது ?

எனது பதினெட்டு வயதிலிருந்து உலக இலக்கியங்களை வாசித்துவருகிறேன். அத்தோடு சமகாலத்தின் முக்கிய படைப்புகள் எந்த தேசத்தில் எழுதப்பட்ட போதும் அவற்றை தேடிவாசிக்கும் பழக்கம் கொண்டிருக்கிறேன். இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு இலக்கியவாதிகளை தேடிச் சென்று பார்த்து அவர்களோடு எனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
எழுத்தாளர்களின் வேலை கதை எழுதுவது மட்டுமே என்று கற்பிக்கபட்டிருந்த பிம்பம் இந்த வாசித்தலில் , சந்திப்பில் கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து போக துவங்கியிருந்தது. பஷீரை சந்தித்த போது சீன யாத்ரீகன் மார்க்கோ போலோவை சந்தித்து பேசிக் கொண்டிருந்தது போன்ற அனுபவமேயிருந்தது. மகேஸ்வததாதேவியை சந்தித்த போது பழங்குடியினருக்காக போராடும் போராளியை கண்ட சந்தோஷம் உண்டானது.
எழுத்தாளர்கள் கதைகளை விடவும் புதிராக வாழ்ந்திருக்கிறார்கள். எதை எதையோ தேடியலைந்திருக்கிறார்கள். அரசியல் ஈடுபாட்டின் காரணமாக சிறைபட்டிருக்கிறார்கள். ஒடுக்கபட்ட மக்களின் விடுதலைக்காக போராடியிருக்கிறார்கள். எழுத்தாளனின் செயல்பாடு பன்முகப்பட்டது. எழுத்தாளன் யாவையும் கடந்த ஒரு ஞானி , எழுத்து ஒரு அகதரிசனம் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக என் வாசிப்பில் நான் நெருக்கமாக உணர்ந்த சிறந்த இருபது புத்தகங்கள் குறித்து வாக்கியங்களின் சாலை என்று ஒரு கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக தான் உயிர்மை இதழில் தற்போது எழுதி வரும் பத்தியை சொல்லலாம்.
இந்தத் தொடரில் தமிழ் எழுத்தாளர்கள் மீது அவர்களுக்கு பல்வேறு துறை சார்ந்த ஆர்வம் இல்லை என்ற விமர்சனத்தை முன்வைக்கிறீர்கள் அப்படியொரு ஆர்வம் எழுத்தாளர்களுக்கு கட்டயாம் இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா ?
ஆர்வம் என்று அதை சொல்ல முடியாது. ஒரு கற்றுக் கொள்ளல் என்று சொல்லலாம். கற்றுக் கொள்வதை கட்டாயப்படுத்த முடியுமா என்ன ? நாம் எழுதத் துவங்கியதும் கற்றுக் கொள்வதை நிறுத்திவிடுகிறோம்.

சமகால நிகழ்வுகள் இலக்கியத்தில் பதிவு செய்யப்படவேண்டியது அவசியமில்லையா ?

சமகாலம் என்றால் என்ன? காலண்டர்தாட்கள் காட்டும் தேதியும் வருடமுமா அல்லது ஊடகங்கள் பெருக்கி காட்டும் பிரச்சனைகளை சமகாலம் என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறீர்களா. ஒரு நபர் ஒரு நாளில் தான் சந்திக்கும் மனிதர்களை நிகழ்வுகளை பொறுத்து தன் வயது அதிகமாகிக் கொண்டும் குறைந்து கொண்டும் வருவதை உணர்கிறார் தானே ? அப்படி என்றால் அவர் எந்த வயதில் எந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். சமகாலம் என்பது ஒரு தோற்றம் மட்டுமே. அதன் வேர்கள் எந்த நுற்றாண்டில் ஒடிக் கொண்டிருக்கின்றன என்று சுலபத்தில் அறிந்து கொண்டுவிட முடியாது.
சோபாக்ளிசின் ஒடிபஸ் அரசனை வாசிக்கும் போது அது நம் காலத்தை பிரதிபலிப்பதாகவே உள்ளது. ஆனால் நாடகம் எழுதப்பட்டு இரண்டாயிரமாண்டு கடந்துவிட்டிருக்கிறது. உம்பர்த்தோ ஈகோவின் நாவல்கள் பல நுற்றாண்டுகளுக்கு முந்திய ரகசிய அமைப்பான டெம்பிளார்களையும் மடாலயங்களையும் நினைவுகள் அழிந்து போகும் தீவையுமே பேசுகின்றன. இதற்காக அதை கடந்த காலத்தின் கதை என்று விலக்கிவிட முடியுமா ? அந்துவாந்த் சந்த் எக்சுபரியின் குட்டி இளவரசன் எந்த சமகாலத்தின் வெளிப்பாடு என்று நினைக்கிறீர்கள் ,
காலம் பற்றிய நமது புரிதல் தெளிவற்றது. நான் காலத்தை சதா திசைகளற்று பொங்கிக் கொண்டிருக்கும் ஒரு நீருற்றை போல தான் புரிந்து கொண்டிருக்கிறேன். ஒடிக்கொண்டிருக்கும் ஆற்றின் மீது அருகாமை மரங்களும் வானில் பறக்கும் பறவையின் நிழலும் தண்ணீரில் பிரதிபலிக்கின்றன. ஆனால் நம் குடத்தில் அள்ளும் தண்ணீரில் பிம்பங்கள் ஒட்டிக் கொண்டு வருவதில்லையே. என்றால் எங்கே பிரதிபலிப்பாகிறது பிம்பம் ? தோற்றம் கடந்த நிஜம் இருப்பதை நாம் கவனிக்க வேண்டியதில்லையா?

உங்கள் கவனம் தற்போது எதில் குவிந்திருக்கிறது. அல்லது எதை தொடர்ந்து விரும்பி வாசித்து வருகிறீர்கள் ?

புத்தரை தொடர்ந்து பத்தாண்டுகளாக பயின்று வருகிறேன். இந்தியசமூகத்தை, மனதை புரிந்து கொள்வதற்கு பௌத்தம் சரியான வழிகாட்டுதலாகயிருக்கிறது. சாஞ்சி, கயா , சாரநாத், நாகார்ஜூன கொண்டா என பௌத்த வாழ்விடங்களை தேடிச் சென்றும் பார்த்து வருகிறேன். இன்று பௌத்ததை கொண்டாடும் பலரும் அதன் சமூககருத்துக்களை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றயாவையும் விலக்கிவிடுகிறார்கள். அரசியல் காரணங்களுக்கான மாற்றுபடிமமாக மட்டுமே புத்தர் பயன்படுத்தபட்டு வருகிறார் உண்மையில் பௌத்த வாழ்முறையில் எவருக்கும் ஈடுபாடில்லை.
புத்தத்தினை புரிந்து கொள்ளாமல் போனதும் அதை வாழ்க்கை நெறியாக பின்பற்ற தவறியதும் இந்திய சமூகம் இழைத்த மாபெரும் தவறு. அதே போலவே பெரியாரை கட்சி அடையாளத்திற்குள் அடைக்க முயன்றதும் தமிழ் அறிவாளிகளின் தவறான வழிகாட்டுதல் என்றே சொல்வேன்.
பெரியார் ஒரு சிந்தனை தளத்தை உருவாக்குகிறார். அதே வேளையில் அதன் செயல்பாட்டிற்கான சாத்தியபாடுகளையும் உருவாக்கியிருக்கிறார். தமிழ்சமூகத்தின் மீது அவர் எழுப்பிய கேள்விகளும் அவரது நேரடி செயல்பாடும் எத்தனை வலிமையானது
பௌத்தம் ஒரு மதமல்ல ஒரு வாழ்முறை. ஒரு சிந்தனைவெளி. இன்னும் சொல்லப்போனால் பௌத்த ஈடுபாடு ஒரு மதமறுப்பு செயல்.
பௌத்தம் முழுமையாக ஸ்தாபனமயமாக்கபட்டுவிட்டது. இரண்டு மகாபிரிவுகள். அதற்குள் நுறு துணைபிரிவுகள். மாந்திரீகம் தாந்திரீகம் , என ரகசிய சடங்குகளையும் பாலியல் கிளர்ச்சி பரபரப்பான மனிதர்களின் மனநெருக்கடியை போக்கும் எளிய தியானமுறை என்று எளிய வணிக தந்திரங்களைக் கொண்டதாகவும் , ஏன் மறைமுகஅதிகார சக்தியாகவும் கூட தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் பௌத்த சிந்தனைகளும் தத்துவமும் அறமும் ஸ்தாபன கட்டுபாடுகளுக்கு வெளியில் தனித்த சிந்தனைகளாக அறிவார்ந்த வழிகாட்டுதலாக உள்ளது. நாம் பின்பற்ற வேண்டியது இது போன்ற பௌத்தநெறியை தான் .

ஊர்சுற்றுவதில் உங்களுக்கு உள்ள ஆர்வம் வெறும் பயணியின் ஆசையா இல்லை எதையாவது தேடிச் சென்று கொண்டிருக்கிறீர்களா ?

நான் சுற்றுலா பயணி அல்ல. இன்னும் சொல்லப்போனால் புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலங்கள் எதையும் நான் பார்த்ததே கிடையாது. தாஜ்மகாலை கூட யமுனையின் கரைகளை ஒட்டிய கிராமங்களில் சுற்றிக்கொண்டிருந்த போது வயல்வெளிகளின் பின்னிருந்து தான் பார்த்திருக்கிறேன். எனது தேடுதலின் காரணம் தெளிவற்றது. அது அவ்வப்போது கிளைக்க கூடியது. பயணத்தில் குறிப்பெடுப்பதோ, புகைப்படம் எடுத்துக் கொள்வதோ எதுவும் கிடையாது. இன்னும் சொல்வதானால் குறிப்பாக எந்த ஊருக்குப் போகப்போகிறேன் என்ற திட்டம் கூட கிடையாது. இமயமலையின் பதினெட்டாயிரம் அடி உயரம் வரை சென்றிருக்கிறேன். கிர்காட்டிற்குள் நடந்து திரிந்திருக்கிறேன். கீழ்வாலை குகைஒவியங்களை கண்டிருக்கிறேன். அஜ்மீரின் தெருக்களில் உறங்கியிருக்கிறேன். புழுதிபடிந்த உடையும் பிளாட்பார கடைகளில் உணவுமாக வாழ்வது பழக்கபட்டிருக்கிறது. இப்போதும் எனது பயணம் இலக்கற்று எந்த நேரமும் புறப்பட தயராகதானிருக்கிறது. ஒரேயொரு வேறுபாடு பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போல பயமற்று எந்த நகரிலும் சுற்றித்திரிய முடிவதில்லை. அத்தோடு பலவருடமாக ஊர்சுற்றியதால் சம்பாதித்த உடல்கோளாறுகள் பயண எல்லையை சுருக்கிக் கொண்டுவிட்டிருக்கிறது.

தொலைகாட்சி தொடர்களிலும் சினிமாவிலும் பணியாற்றியிருக்கிறீர்கள் உங்கள் அனுபவத்தின் அடிப்படையில் தமிழ் திரைத்துறைக்குள் எழுத்தாளருக்கு உள்ள சாத்தியஙகள் சாத்தியமின்னை பற்றி சொல்ல முடியுமா ?

சென்னையில் அறையில்லாத மனிதனாக சுற்றியலைந்த நாட்களில் எனக்கு அறையும் உணவும் தந்தவர்கள் திரைப்பட துறையை சார்ந்த நண்பர்கள். குறிப்பாக , மின்பிம்பங்களின் பால கைலாசம் மிக நெருக்கமான நண்பராகயிருந்தார். அவரது நட்பும் விருப்பமும் தான் தொலைக்காட்சி தொடர்களில் பணியாற்றுவதற்கு காரணமாக அமைந்தது. கைலாசம் மிகச்சிறந்த படிப்பாளி , அமெரிக்காவில் திரைப்படக்கலையை பயின்றவர். இயக்குனர் கே. பாலசந்தரின் மகன். புதிய விஷயங்களை செய்து பார்க்கவேண்டும் என்று விரும்பி தீவிரமாக செயல்பட்டவர்களில் மிக தனித்துவமானவர்.
ஷேக்ஸ்பியரின் மெக்பெத்தை ஒரு டெலிபிலிமாக செய்யலாம் என்று நான் சொன்னபோது அவர் உடனே அதை படமாக்குவதற்கான அனுமதி தந்தார். தமிழ்தொலைக்காட்சி உலகில் அது அபூர்வமானதும் தைரியமான செயல்பாடாகும். அதை பூனா திரைப்படக்கல்லுரியில் படித்த சொர்ணவேல் இயக்கினார். தொலைகாட்சியில் கைலாசம் ஒருவரோடு மட்டுமே சேர்ந்து பணியாற்றியிருக்கிறேன். நண்பர்களின் காரணமாகவே சினிமாவிலும் ஈடுபடுவதற்கு நேர்ந்தது அதை ஒரு வேலையாக நான் ஒருபோதும் செய்ததேயில்லை.
எழுத்தாளின் தேவை காட்சி ஊடகங்களிலும் மிக அதிகமாகயிருக்கிறது. ஆனால் எழுத்தாளரின் இடம் எவரோ ஒரு நகலெடுப்பவரால் நிரப்பபட்டு விடுகிறது சினிமாவில் கதை என்பது எழுதப்படுவதில்லை மாறாக உருவாக்கபடுவது. கதையை உருவாக்குவதற்கு என ஒரு கூட்டமே வேலை செய்கிறது. அதற்காக பலஆயிரம் செலவு செய்கிறார்கள். ஆனால் அந்த செலவில் நுறு ரூபாய் கூட புத்தகம் வாங்குவதற்கு செலவிடப்பட்டிருக்காது.
எந்த சினிமா நிறுவனத்திலும் நுலகம் என்ற ஒன்றை நான் பார்த்ததேயில்லை. தந்திபேப்பரும் வார இதழ்களும் தவிர்த்து மருந்துக்கு கூட ஒரு நாவலோ சிறுகதை புத்தகமோ கதைவிவாதம் நடக்கும் அறைகளில் கண்டதேயில்லை.

தற்போது வெளிவந்துள்ள உங்களது உலக சினிமா புத்தகத்தை எழுத வேண்டும் என்ற எண்ணம் எப்போது உருவானது. உலகசினிமாவின் மீது உங்களுக்கு எப்படி ஈடுபாடு வந்தது. ?

கல்லுரி நாட்களில் இருந்தே மதுரையில் உள்ள திரைப்பட சங்கங்களின் வழியாக உலகதிரைப்படங்களை காணும் பழக்கம் எனக்கு உருவாகியிருந்தது. அத்தோடு கேரளாவில் ஜான் ஆபிரகாமால் துவக்கபட்ட ஒடேசா என்ற திரைப்பட இயக்கத்தின் நண்பர்களின் நட்பு தொடர்ந்து அவர்கள் நடத்திய சினிமாபயிலரங்குகளில் கலந்து கொள்ளவும் திரைப்படவிழாக்களில் பங்கேற்கவும் ஆர்வத்தை உருவாகியது. பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நான் உலகதிரைப்படங்களை பார்த்து வருகிறேன். டெல்லி கல்கத்தா பெங்களுர் என பல்வேறு திரைப்படவிழாக்களுக்கு சென்று வந்திருக்கிறேன். ஆந்த்ரே தார்கோவெஸ்கியும் , லுயி புனுவலும், பெலினியும் குரசேவாவும் எனக்கு பிடித்தமான இயக்குனர்கள்.
சென்னை போன்ற பெருநகரங்களில் கூட திரைப்படங்களை திரையிடுவதை தவிர்த்து அதைப்பற்றிய முறையான அறிமுகமோ , தீவிரமான விமர்சனங்களோ நடைபெறுவதேயில்லை. தியோடர் பாஸ்கரன் வெ. ஸ்ரீராம் போன்ற ஒரு சில தனிநபர்களின் ஈடுபாடு மட்டுமே சினிமவை புரிந்து கொள்வதற்கான எழுத்துப் பிரதிகளை உருவாக்கி தந்திருக்கிறது.

ஒரு சிறுபத்திரிக்கை எழுத்தாளராக அறியப்பட்டு வந்த நீங்கள் இன்று பிரபலமான தமிழ் எழுத்தாளராக ஆகியுள்ளீர்கள். இந்த மாற்றத்தை எப்படி உணர்கிறீர்கள் ?

நான் 1984 ல் எழுத துவங்கி இன்றுவரை இருபது ஆண்டுகள் கடந்துவிட்டன. இதுவரை இலக்கியவாசகர்களுக்கு மட்டுமே பரிச்சயமாகயிருந்த எனது எழுத்து இன்று பல்வகை பட்ட வாசகர்களை நோக்கி விரிந்திருக்கிறது. இது என் புத்தகங்களுக்கான வாசகர்களை அதிகப்படுத்தியிருக்கிறதே தவிர எனது ஈடுபாட்டில் எந்த மாற்றத்தையும் உருவாக்கவில்லை.

ஆனந்த விகடனில் வெளியான உங்கள் துணையெழுத்து தொடர் மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆனால் அது இதுவரையில்லாத உங்கள் எழுத்தில் ஒரு ரொமான்டிசிசத்தை துணையெழுத்து கொண்டிருப்பதாக ஒரு விமர்சனமிருக்கிறது. அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

துணையெழுத்து ஒரு கட்டுரைத் தொடர். எனது பயணத்தையும் நான் கண்ட மனிதர்களையும் முன்வைத்து எழுதப்பட்ட ஒரு பத்தி.. அது விகடனில் வெளியானதே தவிர எந்த சிறுபத்திரிக்கையிலும் வெளிவந்திருக்க கூடிய சாத்தியம் கொண்டது தான். நான் கட்டுரைகளை புனைவுமொழியில் எழுதுகின்றவன்.
தமிழில் பொதுவாக கட்டுரைகள் என்றாலே ஒரு சலிப்பூட்டும் நடையில் வழிக்கொழிந்து போன வார்த்தைகளையும் புள்ளிவிபரங்களும் கோட்பாடுகளையும் நிரப்பி நம்மை மூச்சுதிணற வைப்பதாகவேயிருந்து வந்திருக்கின்றன. நான் வாசித்தவரை போர்ஹேயின் கட்டுரைகள் மிக தீவிரமானவை ஆனால் அதன் மொழி புனைவு தன்மை மிக்கது. உம்பர்த்தே ஈகோ வாசித்துபாருங்கள். எவ்வளவு பெரிய விஷயங்களை கூட எத்தனை எளிமையாகவும் பரிகாசத்துடனும் புரிந்து கொள்ள வைக்கிறார். இதாலோ கால்வினோ , ஆக்டோவியா பாஸ், மார்க்வெஸ் என பல முக்கிய எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகள் தரும் வாசிப்பு அனுபவம் மிக உயர்ந்த நிலையிலிருக்கிறது.
காருகுறிச்சி அருணாசலம் மறைந்து நாற்பதாண்டுகள் முடிந்துவிட்டது இதுவரை அவருக்கு வாழ்க்கை வரலாறு கூட எழுதப்படவில்லை. அவரை பற்றி எந்த இதழிலும் யாரும் எழுதுவதில்லை என்று துணையெழுத்தில் அவரைப்பற்றி எழுதியதைப் படித்துவிட்டு அவரது மகள் நன்றி தெரிவித்ததோடு காருகுறிச்சிக்கு நினைவாக பூஜையில் வைக்கபட்டிருந்த சிறிய சந்தன நாதஸ்வரத்தை எனக்கு பரிசாகவும் அளித்தார்கள். அது போலவே பிரமீள் பற்றிய கட்டுரையை வாசித்துவிட்டு அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள கரடிக்குடியில் ஒரு நினைவு மண்டபம் எழுப்புவதற்கு அமெரிக்காவிலிருந்து ஒரு மருத்துவர் ஒரு லட்ச ரூபாய் எனக்கு அனுப்பிவைத்திருந்தார்.
நினைவுமண்டபம் அனுப்புவதை விடவும் புத்தகவெளியீடுகள், இலக்கிய கூட்டங்கள் நடத்துவதற்காக சென்னையில் பிரமீள் பெயரால் ஒரு நினைவு அரங்கம் அமைப்பது நல்லது என்று தோன்றுவதாக சொல்லி அப்பணத்தை திருப்பி அனுப்பிவைத்தேன். இரண்டு ஆண்டுகளுக்குள் பிரமீள் பெயரால் அரங்கம் கட்டிதருவதற்கு இப்போது அவர் ஆர்வமாக பணம் சேகரித்துக் கொண்டிருக்கிறார். வாசிப்பை மீறி ஒரு செயல்பாடாக தான் துணையெழுத்தின் எதிர்வினை அமைந்திருந்தது.

தமிழில் சிறுபத்திரிக்கைகளின் எண்ணிக்கை குறைந்து இடைநிலை பத்திரிக்கைகள் அதிகரித்துள்ளதே. இன்று ஒரு சிறுபத்திரிக்கையின் தேவை என்ன என்று நினைக்கிறீர்கள். ?

எப்போதுமே சிறுபத்திரிக்கைகள் மாற்றுக்குரலுக்கு உரிய களத்தை உருவாக்குவதற்கு தான் முனைந்திருக்கின்றன. அதன் நோக்கம் வாசகர்களை விருத்தி செய்வது அல்ல. குறிப்பிட்ட ஒரு நோக்கம் சார்ந்து நண்பர்களால் தங்களது கைப்பணத்தை செலவு செய்தது தான் சிறுபத்திரிக்கைகள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இன்று தமிழில் முக்கிய எழுத்தாளர்களாக அறியப்படும் யாவரும் சிறுபத்திரிக்கையில் எழுதி வந்தவர்களே. சிறுபத்திரிக்கைகளின் தேவை எப்போதுமே இருந்து வரக்கூடியது தான்.
இடைநிலை இதழ்களின் மீது எனக்கு நம்பிக்கையில்லை. அவை எந்த விததத்தில் தன்னை இடைநிலையாக நினைத்துக் கொள்கிறது என்று தெரியவில்லை. பத்தாயிரம் பேர் படிப்பதால் அது இடைநிலை இதழாகிவிடாது. அதுவும் சிறுபத்திரிக்கை தான். இடைநிலை இதழ் என்றால் தமிழ்சினிமா விமர்சனமிருக்கும் நாலு கலர்பக்கமிருக்கும். அத்தோடு ஒன்றிரண்டு மொழிபெயர்ப்பு கதைகள் வெளியிடப்படும் என்பது தானா ? தமிழுக்கு தேவை தீவிரமான சிந்தனை தளத்தை உருவாக்க கூடிய இதழ்கள். அதை எத்தனை பேர் வாசகர்களாகயிருக்கிறார்கள் என்பதை வைத்து முடிவுசெய்ய முடியாது. அதே நேரம் சிறுபத்திரிக்கை என்ற பெயரில் துதிபாடும் குழுக்களை உருவாக்கி கொள்வதும் , அடுத்தவரை வசைபாடுவதும் எழுத்தாளனை ஒரு மலம் துடைக்கும் காகிதத்தை போல துடைத்தெறிவதையும் சகித்துக் கொள்ள முடியவில்லை..

அரவான் என்ற உங்களது நாடகம் சமீபத்தில் அதிகம் பேசப்பட்டது. ஏன் நாடகத்திற்கு அரவானை தேர்வு செய்தீர்கள். ?

வியாச பாரத்தில் அரவான் களப்பலி பெரிதாக விவரிக்கபடவில்லை. ஆனால் தமிழகத்தில் அரவானுக்கு ஒரு முக்கியத்துவமிருக்கிறது. குறிப்பாக நாட்டார் மரபில் அரவான் கிருஷ்ணனால் தான் களப்பலிக்கு தேர்வு செய்யப்படுகிறான். பின்பு கிருஷ்ணனே பெண் வேடமிட்டு வந்து அரவானோடு கலவி கொள்கிறான். கிருஷ்ணன் ஆண் பெண் என இரண்டு உடல் கொண்டவானாகயிருந்ததால் அரவாணிகளும் அவரைப் போலவே நீலம் பூசிக்கொண்டு ஒரு இரவு அரவானை மணந்து மறுநாள் தாலியறுத்துவிட்டு ஒப்பாரி வைக்கிறார்கள். இந்த சடங்கு கூவாகத்தில் ஆண்டு தோறும் நடக்கிறது.
அரவான் ஒரே நேரத்தில் ஒடுக்கட்ட மனிதனையும் விலக்கப்பட்ட பால் உறவிற்கும் அடையாளமாகயிருக்கிறான். அத்தோடு யுத்தத்தில் சாதாரண மனிதர்கள் பலிகொடுக்கபட்டு வருவது காலம்காலமாக நடந்துவருகின்றது என்பதற்கு சாட்சியாகவுமிருக்கிறான். அரவான் ஒரு வனகுடி. இப்படி பலதளங்கள் கொண்ட கதாபாத்திரமாகயிருப்பதால் தான் அரவானை நாடகமாக்கினேன்.

இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?

பௌத்த விகாரை ஒன்றை பற்றிய நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். விகடனில் கதாவிலாசம் என்று தமிழின் முக்கிய சிறுகதையாசிரியர்களை பற்றி ஒரு பத்தியை எழுதிக் கொண்டுவருகிறேன். இணையத்தில் அட்சரம் என்ற பெயரில் உள்ள எனது பிளாக்கில் அவ்வப்போது சிறுகட்டுரைகள் .எழுதுகிறேன். இயற்கையை பற்றி உலகமெங்கும் உள்ள பல்வேறு பழங்குடி மக்களால் சொல்லப்பட்டுவரும் நுறு குழந்தைகள் கதைகளை மொழிபெயர்த்திருக்கிறேன். அது ஏப்ரலில் தனிநுலாக வெளிவரயிருக்கிறது.

இரண்டுவருடமாக சென்னைவாசி விட்டீர்கள் எப்படியிருக்கிறது சென்னை வாழ்க்கை ?

எனக்கு எந்த மாற்றமும் தெரியவில்லை. குழந்தைகள் தான் விளையாடுவதற்கு இடமின்றியும். சேர்ந்து கதை பேச நண்பர்கள் இன்றியும் , தனித்து விடப்பட்டிருக்கிறார்கள். கரை ஒதுங்கிய படகை போல ஒரு தீராதனிமை பீடித்திருக்கிறது. நான் தப்பிக் கொள்வதற்கு புத்தகங்களுக்குள் தலைகவிழ்ந்தபடியோ அல்லது யாவரும் உறங்கிய பின்இரவில் விழித்துக் கொண்டு தெருவை வேடிக்கை பார்த்தபடியோ இருக்கிறேன். மனைவியும் குழந்தைகளும் தங்களது இயல்பை மறந்து மௌனமாகிக் கொண்டு வருகிறார்கள். தொலைகாட்சியில் ஆழ்ந்துபோயிருக்கும் அவர்கள் முகங்களை கவனிக்கும் போது அது நிம்மதியற்றதாகவே தெரிகிறது. அதை நினைக்கும் போது தான் சற்றே பயமாக இருக்கிறது.

பின்னூட்டமொன்றை இடுக