வனச்சிறுவனின் அந்தகன்

சூழ்ந்த நீருக்குள் மீனென அறியப்பட்டதை
செவிட்டூமை அந்தகனுக்குணர்த்திடும் படி
மிகக்கடின பணியொன்று
வனச்சிறுவனுக்கிடப்பட்டது

எந்தக் கொம்பிலும்
ஏறித் தேனெடுப்பவன்
கொடிய விலங்கினையும் தனியே வேட்டையாடி
ராசாவுக்குத் தோல்/ள் கொடுப்பவன்
வனாந்தரத்தின் அத்தனை மூலைகளுக்கும்
அமாவாசை நிசியிலும்
அச்சமின்றிப் போய்வருபவன்
முதன்முதலில் அயர்ந்து நின்றான்
கட்டளையை மறுக்க வழியற்றும்
மேற்கொண்டு ஏதும் செய்யும் நிலையற்றும்
விதிர்த்து நின்றான்

செய்வதறியாச் சிறுவன்
நடுங்குமந்தகனின் விரல்கள் பிடித்து
வனத்தின் மத்திக்கு வழிகூட்டிப் போனான்
அல்லிப் பெருங்குளத்தினுள்ளவன்
கரங்களை நுழையச் செய்திவன் ‘தண்ணீர்’ என்றான்
காலங்காலமாய்க் கடந்துவந்த வாழ்வின் சோர்வு தீரவெனவோ
வற்றாத் தேகத்தின் எல்லாத்தாகங்களுந் தீரவெனவோ
கரங்களைக் குழிவாக்கி உள்ளங்கையில் நீரேந்தி
அள்ளியள்ளிக் குடித்தான் அந்தகன்
சிறுவனின் பார்வைக்கு மட்டுமென
நீரின் எல்லாச் சுழிகளிலும் நழுவி நீந்தின
வண்ண வண்ண மீன்கள்

கற்றுக் கொடுக்கவேண்டிய
கால எல்லை முடிந்ததெனச் சொல்லி
அரச பரிவாரங்கள் சேதியனுப்பிய நாளில்
விடியலின் கீற்றுக்கள்
மலைகளின் கீழால் புதையுண்டு போக
விருட்ச இலைகள் நீரைச் சிதறிட
மழை தூவிற்று

வீற்றிருந்த அரசனை முன்னிருத்தி
செவிட்டூமைக் குருடனை
மீன்கள் பற்றிக் கேள்விகள் கேட்டான் மந்திரி
தாமரைக்குளத்துத் தண்ணீரில் எண்ணங்கள்
மிதக்குமவனது மொழிபெயர்ப்பாளனாகி
எல்லாக் கேள்விகளுக்கும்
மிகச் சரியாய்ப் பதில் சொன்னான் வனச்சிறுவன்

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


நன்றி

# உயிர்நிழல் – ஏப்ரல், ஜூன் இதழ் – 2010 
# காற்றுவெளி – செப்டம்பர், 2010
# நவீன விருட்சம்
# உயிர்மை
# வார்ப்பு
# திண்ணை
# தமிழ் முரசு அவுஸ்திரேலியா

Wednesday, September 1, 2010

தூறல் மழைக் காலம்

குளிர் காற்றினூடான வானம்
இளநீலம்

மெல்லிய நீர்த்துளிகள்
இசை சேர்த்து வந்து
மேனி முழுதும் தெளிக்கின்றன
நீண்ட காலங்களாக
சேகரித்து வைத்த அன்பை

அமானுஷ்ய ஈரத்தோடு
தளிர் விட்டிருக்கும் அகத்தி
பெண் நெற்றிப் பொட்டு வடிவ
பச்சை நீளிலை மரத்தில்
ஊதாப்பூக் காய்கள் கொத்தியுண்ணும்
ஏழெட்டுக் கிளிகள்
செந்நிறச் சொண்டுகளுடன்
மாதுளம்பூக்கள்

தனிமையை அணைத்தபடி
அடுத்த பாடலை
நான் ஆரம்பிக்கலாம்
அதன் பிண்ணனியில்
மழையும்
நதியின் ஈரலிப்பும்
குளிரின் வாசனையும்
இதே பசுமையும் என்றுமிருக்கும்

நீயும்
என்னுடன் இருந்திருக்கலாம்

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

09012010

நன்றி
# வீரகேசரி வார இதழ் 22.08.2010
# உயிர்மை
# நவீன விருட்சம்
# திண்ணை

Sunday, August 15, 2010

பெண்

பறவைகளின் பாதையில் குறுக்கிடும்
கரங்களைப் பெற்றிருந்தவனின் தலையில்
மரங்கள் முளைத்திருந்தன
கிளைகளையடைந்து கூடுகட்டுவதை
அஞ்சிய பட்சிகளெல்லாம்
பறப்பதையும் மறந்தன
கூடு கட்டுதலையும் மறந்தன
பின்னர் அப்படியே தம் இருப்பையும் மறந்து
அந்தரத்தில் இறந்து வீழ்ந்தழிந்தன

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை



நன்றி
# காற்றுவெளி
# உயிர்மை
# திண்ணை
# தமிழ் முரசு அவுஸ்திரேலியா

Sunday, August 1, 2010

சூறாவளியின் பாடல்

பலம் பொருந்திய
பாடலொன்றைச் சுமந்த காற்று
அங்குமிங்குமாக அலைகிறது
இறக்கி வைக்கச் சாத்தியமான
எதையும் காணவியலாமல்
மலைகளின் முதுகுகளிலும்
மேகங்களினிடையிலும்
வனங்களின் கூரைகளிலும்
நின்று நின்று தேடுகிறது
சமுத்திரவெளிகளிலும்
சந்தைத் தெருக்களிலும்
சுற்றித்திரிய நேரிடும்போது
இரைச்சல்கள் எதுவும் தாக்கிடாமல்
பொத்திக்கொள்கிறது பாடலை
பறவைகள் தாண்டிப் பறக்கையிலும்
காத்துக்கொள்ளப்படும்
இசை செறிந்த பாடல்
சலித்துக் கொள்கிறது
ஓய்வின்றிய அலைச்சலின்
எல்லை எதுவென்றறியாது
தனிமைப்பட்டதை
இறுதியிலுணர்ந்தது
தெளிந்த நீர் சலசலக்கும்
ஓரெழில் ஆற்றங்கரை
மரமொன்றின் துளைகளுக்குள்ளிருந்து
வெளிக்கசிந்து பிறந்த நாதம்
இருளுக்குள் விசித்தழும்
பாடலின் கண்கள் துடைக்கும் காற்று
அதைச் சில கணங்கள்
அந்தரத்தில் நின்று
பத்திரமாகப் பார்த்திருக்கச் சொல்லி
ஆவேசத்தோடு கீழிறங்கும்
பின்னர் பாடலை அழ வைத்த
காரணம் வினவி
தான் காணும்
வெளி, தெரு, சமுத்திரம், நதி, வனமென
அத்தனையிலும் தன் சினத்தினைக் காட்டி
அடித்துச் சாய்க்கும்
இயலாமையோடு எல்லாம்
பார்த்திருக்கும் பாடல்
இறுதியில் கீழிறங்கி
எஞ்சிய உயிர்களின்
உதடுகளில் ஒப்பாரியாகி
கோபக் காற்றெதிரில் செத்துப்போகும்
காலம்
இன்னுமோர் பாடலை
காற்றுக்குக் கொடுக்கக் கூடும்
– எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
 
நன்றி
# காலச்சுவடு இதழ் 123, மார்ச் – 2010
# உயிர்மை
# விகடன்
# திண்ணை
# தமிழ் முரசு அவுஸ்திரேலியா

Thursday, July 15, 2010

மான்குட்டியைக் கைவிட்ட பின்

கனவுகளின் பிறழ்வுகளுக்குள்
மான்குட்டிகளை ஓடவிட்டபடி
பெருநகரத்துத் தெருவழியே
மேய்ப்பாளன் நடந்தான்
அழகழகாய்ப் புள்ளிகளிட்ட மான்கள்
அமைதியாக
அவன் காட்டிய திசை நடந்தன
ஆஸ்திகளனைத்தையும் அவனிடம் கொடுத்து
ஓர் மான்குட்டி வாங்கினேன்
என்னிடமிருந்து துள்ளிப்பாய்ந்த மான்
எங்கோடிற்றென நினைவில்லை
மான்குட்டியும் ஆஸ்திகளும்
கனவுகளின் பிறழ்வுகளினிடையிருந்து
இன்னும் மீளவேயில்லை
நானும்

– எம்.ரிஷான் ஷெரீப்
இலங்கை


நன்றி
# அம்பலம் கலை இலக்கிய இதழ் – ஜனவரி, 2010
# சொல்வனம் இதழ் – 28
# உயிர்மை

பின்னூட்டமொன்றை இடுக